Monday, September 3, 2012

அது ஒரு நூல்

அது
ஒரு நூல்

அந்த
அற்புத நூல்
உன் கைகளில்

உனக்கும்
அந்த நூலுக்கும்
விட்டுப் பிரிவதியலாத்
தொடர்பு

ஆனால்
பரிதாப ஆச்சரியம்
யாதெனிலோ
அந்த நூல் பற்றி
ஏதும் தெரியாது
உனக்கு

வெறுமனே
அதை வாசித்தாலே
நன்மைகள் கோடி என்ற
பிழையான நினைப்புதான்
உனக்கு

நீ கற்றவன்
ஆனால் அந்த நூலை
நீ கற்றதில்லை

நீ புத்திமான்
ஆனால்
அந்த நூலுக்கும்
உன் புத்திக்கும்
விளங்கி எட்டுவதில்
வெகு தூரம்

பாட நூலை நீ வாசிப்பது
கற்பதற்காக

ஆனால்
உன் அந்த நூலை
நீ வாசிப்பது
வாசிப்பதற்காக மட்டும்

வாசித்தால் போதும்
சொர்க்கம் வசப்படுமென்று
தவறாக உன் மூளையைத்
தட்டிக்கொடுத்த
தப்பான அறிவிலிகளை
மன்னிக்கமாட்டான் அவன்

காலம் எழுப்பிவிட
உன் கல்விக்கண்
விழித்துவிட
இன்னுமா வேண்டும்
உனக்கு அந்த இருட்சிறை

எந்த ஒரு
மொழியினைக் கற்பதும்
விளங்கவும் பேசவும்
எழுதவும்தான்

ஆனால்
அந்த நூலின்
மொழியைப் பயில்வது மட்டும்
வாசிக்க மட்டும்தானா... ஏன்

அறிவுச் சுடர் எரியும்
உன் கல்வி வாழ்வின் தலைப்பணி
அந்த நூலை ஆய்ந்தறிவதாய் அல்லவா
அமைந்திருத்தல் வேண்டும்

அவன்
சொல்லும்
சொலைப் புரியாமல்
அவன்
சொல்லைச்
சொல்லி ஆவதென்ன

அவன்முன் பணிந்து
அவன் காதில் நீ
ஓதுகிறாய்

உன் நெஞ்சினின்று
பொருளோடு புறப்படாத
ஒரு சொல்
எத்தனை அழகானதாயினும்
அவன் செவியைச்
சேருமா

அவனை
அறிவதற்காகவே
அருளப்பட்ட அந்த நூல்
இதோ
இன்னமும்
உன் கைகளில்தான்

1 comment:

  1. அருமை .
    அவனை அறிந்துவிட்டால் நீ மகத்துவம் பெற்றுவிட்டாய்

    ReplyDelete