Thursday, October 4, 2012

ஒரே ஒரு பெண் நபியின் பெயரை கூறுங்கள் பார்க்கலாம்

பெண்கள் ஆண்களுக்கு நிகரானவர்கள் என்றால் ஒரே ஒரு பெண் நபியின் பெயரை கூறுங்கள் பார்க்கலாம் என்றார் ஒரு சகோதரர்.

இதுபோன்ற கேள்விகளுக்கு என்னால் ஏதேனும் பதில் தர முடியுமா என்று முயன்றதில் வந்த பதில்கள் இதோ:

பதில் ஒன்று:

அத்தனை நபிமார்களையும் பெற்றெடுத்தது பெண்தான். அவர்கள் பெற்றெடுக்காமல் நபிகள் பிறக்க வேறு வழியில்லை. இதில் தொப்புள் என்ற ஒன்றே இல்லாத ஆதாம் நபியைமட்டும் விலக்கிவிடுவோம்.


பதில் இரண்டு:

இறைவன் சாத்தான்களால் தீண்டமுடியாத ஓர் அற்புதப் பிறவியை நபியாய்ப் பெற்றெடுக்க தேர்வு செய்ததும் மர்யம் என்ற பெண்ணைத்தான்.


பதில் மூன்று:

ஏன் எந்த ஓர் ஆணுக்கும் உயிரைச் சுமக்கும் உன்னத உயிர் என்ற உயர்ந்த அந்தஸ்தை இறைவன் கொடுக்கவே இல்லை என்று இதற்குத் திருப்பிக் கேட்டால் எப்படி இருக்கும்?


பதில் நான்கு:

தாயின் காலடி சொர்க்கம் என்று கூறப்பட்டபோது தந்தையின் காலடி சொர்க்கம் என்று கூறப்படவில்லையே? ஆண் தாழ்ந்தவன் என்பதாலா?


பதில் ஐந்து:

தாயின் மார்பு பால் சுரந்து பச்சிளம் குழந்தையின் உயிர் வளரும்போது தந்தையின் மார்பு பால் சுரக்கவில்லையே ஏன்? ஆண்கள் பெண்களைவிட தாழ்ந்தவர்கள் என்பதாலா?


பதில் ஆறு:

ஹவ்வா இல்லாமல் ஆதாம் மட்டும் படைக்கப்பட்டிருந்தால், நாம் இப்படி உரையாடிக் கொண்டிருக்க முடியுமா?  

ஆணாதிக்க உணர்விலிருந்து மீண்டு வாருங்கள் நண்பரே.  அதுதான் இஸ்லாத்தின் வழி.

No comments:

Post a Comment